பதுளை, கெப்பிட்டிபொல நகரில் உள்ள ஆரம்ப வைத்திய சிகிச்சைப்பிரிவின் கட்டடத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இருந்து நாக பாம்பு குட்டிகள் வெளியில் வருவதை அந்த வைத்திய பிரிவின் ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெற வருவோர் பல முறை கண்டுள்ளனர்.
தொடர்ந்து இந்த பாம்பு குட்டிகள் குறிப்பிட்ட வளாகத்தை வலம் வருவதால் நோயாளர்களும் வைத்திய ஊழியர்களும் பதட்டத்துடனும்,பயத்துடனும் குறித்த வைத்தியசாலைக்கு செல்கின்றனர்.
இதனை அடுத்து இது ஆபத்தான நிலைமை என்பதால், அது பற்றி வைத்திய பிரிவின் ஊழியர்கள்,பாம்புகளை பிடித்து காட்டில் விடும் இளைஞர் ஒருவருக்கு அறிவித்துள்ளனர்.
எட்டம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான சுப்புன் லக்ஷ்சான் என்ற இந்த இளைஞர், பாம்புகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி அவற்றை பிடித்து வனப்பகுதிகளில் விடுவதை நீண்ட காலமாக செய்து வருவதாக கூறப்படுகிறது.
அறிவிப்புக்கு அமைய கெப்பிட்டிபொல நகரில் உள்ள வைத்திய சிகிச்சைப்பிரிவுக்கு சென்ற இளைஞன், பிரதேசவாசிகளின் உதவியுடன் மரம் அமைந்திருந்த இடத்தை தோண்டியுள்ளதுடன் தோண்டிய குழிக்குள் இருந்து ஒரு தாய் நாகமும் அதனின் 25 குட்டிகளும் பாதுகாப்பான முறையில் குறித்த இளைஞனால் கைப்பற்றி வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டுள்ளது.