நாடொன்றின் சமூகமொன்றின் இருப்புக்கு கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்கள் இன்றியமையாயததாக அமைவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.
வெருகல் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச இலக்கிய விழா இன்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்றபோதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
ஒவ்வொரு சமூகத்தினதும் கலை, கலாசார மற்றும் பண்பாட்டு அம்சங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும்.
அவற்றை மதித்தல் வேண்டும். பாரம்பரிய கலை கலாசார அம்சங்கள் மறைந்து வரும் தருணத்தில் அவற்றுக்கு புத்துயிர் வழங்கும் நோக்கில் இக்கலை இலக்கிய விழாவின் நிகழ்வுகள் அமையப்பெற்றது.
குறிப்பாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலைசார் திறன்களை இனங்கண்டு அவர்களது நிகழ்ச்சிகளை நெறியாழ்கைக்குட்படுத்தி சிறப்பான முறையில் முன்வைப்பதற்கு பிரதேச செயலாளர் வழங்கிய தலைமைத்துவத்தை பாராட்டுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
காவடி, கிராமிய நடனம், நாட்டார் பாடல்,தெம்மாங்கு நடனம், நாட்டுக்கூத்து,குறவர் நடனம், வயல் பாடல் உள்ளிட்ட பல பாரம்பரிய அம்சங்கள் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலக உத்தியோகத்தர் மிக சிறப்பாக தம் கலையுணர்வுகளை இதன்போது முன்வைத்தனர். பாரம்பரிய கலைஞர்கள் மூவர் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.
அரசாஙரக் அதிபர் இதன்போது பிரதேச செயலாளர் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாரக், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் , உட்பட பலரும் கலந்து கொண்டனர்.