
பதுளை – லுணுகலை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம், இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது. நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற பிரதேச சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இவ்வாக்கெடுப்பில் , ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும், நடுநிலையாக 3 வாக்குகளும் பதிவாகின. இதில், ஐக்கிய தேசய கட்சியை சேர்ந்த 7 உறுப்பினரும், ஜே.வி.பியை சேர்ந்த ஒரு உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 3 உறுப்பினரும், பொதுஜன பெரமுனவை சேர்ந்த 2 உறுப்பினரும் குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 2 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ள, இதேவேளை மலையக மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்களும் இதற்கு நடுநிலை வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
மேலும் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற 2023 ம் வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் முதல் முறை வாக்கெடுப்பில் லுணுகலை பிரதேச சபை 8 மேலதிக வாக்குகளால் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.