
வெளிநாட்டு கடன்வழங்குநர்களிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில், இலங்கையின் பொருளாதார நிலைமை வேகமாக மோசமடைந்து மக்களின் அடிப்படை தேவைகளை மேலும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு, சர்வதேச கடன் வழங்குநர்கள் இலங்கையின் கடனை மறுசீரமைக்க ஒப்புக்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்கான இறுதி அனுமதியைப் பெற முடியும். அத்துடன், பிற உலகளாவிய முகவர்களிடமிருந்தும் நிதியுதவி பெற முடியும்.
கடந்த ஏப்ரலில், சர்வதேச கொடுநர்களுக்கு 50 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடன்களை செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியது.
இந்தநிலையில், கடந்த செப்டம்பரில், சர்வதேச நாணய நிதியத்துடன் நான்கு வருட, 2.9 பில்லியன் பிணை எடுப்புக்கான பணியாளர் மட்டத்திலான ஒப்பந்தத்தை எட்டியது.
அந்த பிணை எடுப்பின் முதல் தவணையானது அந்நியச் செலாவணியின் பற்றாக்குறையை எளிதாக்குவதுடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பிற நிதியுதவிக்கான அணுகலுக்கு வழிவகுக்கும்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை முழுமைப்படுத்தும் வரையில் புதிய நிதியை பெறமுடியாது.
சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா உட்பட இலங்கையின் முக்கிய வெளிநாட்டு கடன் வழங்குநர்கள், பொருளாதார நெருக்கடியினால் ஏற்படும் பாதகமான மனித உரிமை தாக்கங்களை அவசரமாக தணிக்க வேண்டும்.
அத்துடன், மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, சர்வதேச நாணய நிதியம் அதன் நடைமுறைகளைப் பயன்படுத்தி தேவையான நிதியை விரைவில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது