இராணுவத்தினருக்கு கொடுக்கும் மரியாதை மலையக தொழிலாளர்களுக்கும் கொடுத்தல் வேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல்

போர்க்காலத்தில் இறந்த இராணுவத்தினருக்கு கொடுக்கும் மரியாதை மலையக தொழிலாளர் வர்க்க உழைப்பு வீரர்களுக்கும் கொடுத்தல் வேண்டும் என மலையக மக்களின் மாண்பை பாதுகாக்கும் அமைப்பின் ஆலோசகரான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

பதுளை ஹாலிஎல மேற்பிரிவு தோட்ட மயான பூமி அகழ்வழிக்கப்பட்டமை மனித நாகரீக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றல்ல. அது சட்டத்துக்கு முரணானதுமாகும். அத்தோடு புதைக்கப்பட்டவர்களையும் அவர்களின் உறவுகளையும் மட்டுமல்ல மலையக மக்கள் சமூகத்தையே அவமதிக்கும் செயல் என்பதால் இதனை வன்மையாக கண்டிப்பதோடு முறையான விசாரணை நடத்தப்பட்டு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதோடு, புதைக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் மன்னிப்பு கோரி மயானம் பாதுக்காக்கப்படல் வேண்டுமென மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பு வேண்டுகோள் விடுப்பதோடு இனியும் இவ்வாறு நடக்க தோட்ட கம்பெனிகள் இடமளிக்க கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறது.

பொதுவாக புதைகுழிகள் அகற்றப்படுமாயின் அது தொடர்பில் நீதிமன்றில் முன் அனுமதி பெற்று புதைக்கப்பட்டவர்களின் எச்சங்கள் உரிய மரியாதையுடன் வேறு இடமொன்றில் முறையாக புதைக்கப்பட்டதன் பின்னரே மயான பூமி வேறு தேவைக்காக பாவிக்கப்படலாம். இவ்வாறான முன் அனுமதியினை பதுலை ஹாலிஎல மேற்பரப்பு தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொண்டதா இல்லையாயின் ஏன்?

மலையக மக்கள் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் இந்நாட்டில் தமது 200 வருட வரலாற்று வாழ்வை பெருமையுடன் நினைவு கூற இருக்கின்ற சந்தர்ப்பத்தில் மயான பூமி அழிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள் அல்ல என கூறுவதாகவே உள்ளது. இதுவே பேரினவாதம் இதுவே இன அழிப்பு.

மலையக மக்கள் மலையகத்தை நோக்கி ஆரம்ப காலங்களில் கால்நடையாக அழைத்து வரப்பட்ட போது வழியில் நோயின் காரணமாக கைவிடப்பட்டு இறந்தவர்கள் மிருகங்களின் உணவாகியவர்களுமுண்டு. மிருகங்களின் தாக்கம் காரணமாகவும் கொல்லப்பட்டுமுள்ளனர். கடல் சீற்றத்தினால் மரணித்துள்ளனர். மலை பாங்கான பிரதேசத்தை உற்பத்தி பயிர் நிலங்களாக மாற்றும்போது அந்த நிலவிய காலநிலை காரணமாகவும் வனவிலங்குகளின் தாக்கம் காரணமாகவும் 1841 வரை 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் 1841- 1849 இடைப்பட்ட காலப்பகுதியில் 90,000 ஆயிரம் பேர் இறந்ததாகவும் கூறப்படுகின்றது. இக் காலகட்டத்தை தொடர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக நூற்றுக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இவர்களுக்கெல்லாம் கல்லறைகளோ, மயான பூமிகளோ கிடையாது. இவர்களை எல்லாம் கௌரவிக்கவிருக்கின்ற கால சூழ்நிலையில் ஹாலிஎல தோட்ட சம்பவம் மிகுந்த மன வேதனை அளிக்கின்றது.

வடகிழக்கு எங்கும் விடுதலைப் புலிகளின் காலத்தில் உரிய மரியாதையுடன் பாதுகாத்து வந்த மாவீரர் துயிலும் இல்லங்களை கடந்த ஆட்சியாளர்களால் முழுமையாக அழிக்கப்பட்ட போதும் வடகிழக்கு தமிழர்கள் அவர்களின் நினைவிடங்களில் வருடந்தோறும் உணர்வுபூர்வமாக விளக்கேற்றி நினைவேந்தல் நடத்துகின்றனர். இத்தகைய நினைவேந்தல் தியான வாரத்தில் ஹாலிஎல மேற்பிரிவில் மயானம் அழிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களும் உழைப்பு வீரர்களே. அவர்கள் மயானங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் மேற்படி தோட்ட நிர்வாகம் மயானத்தினை அழிக்கும் செயற்பாட்டினை உடன் நிறுத்தி நீதிமன்றில் முன் அனுமதி பெற்றிட வேண்டும். புதைக்கப்பட்டவர்களில் அடையாளம் தெரிந்தோரின் எச்சங்கள் உரிய கௌரவத்தோடு வேறு இடங்களில் புதைக்கப்படுவதோடு அடையாளம் தெரியாதோரின் எச்சங்கள் தனியான பொது இடத்தில் புதைக்கப்படவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தோட்ட கம்பெனிகள் அனைத்து தோட்டங்களிலும் இறந்தவர்களை புதைப்பதற்கான தனியான இடத்தினை ஒதுக்கி தோட்ட நிர்வாகமே அதனை பராமரிக்கவும் வேண்டும். அங்கு புதைக்கப்பட்டவர்களும் புதைக்கப்படுபவர்களும் தோட்டங்களில் வியர்வை சிந்தி உழைத்தவர்கள் மட்டுமல்ல, நாட்டுக்கு அன்னிய செலவணியை ஈட்டித் தந்து நாட்டை பாதுகாக்கும் தொழில் வீரர்கள். போர்க்காலத்தில் இறந்த இராணுவத்தினருக்கு கொடுக்கும் மரியாதை இவ் தொழிலாளர் வர்க்க உழைப்பு வீரர்களுக்கும் கொடுத்தல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *