_63805851e6119.jpg)
தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பாடசாலையில் இருந்து இடைவிலகிய மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களை, இணங்கண்டு அவர்களுடைய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் மற்றும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது மட்டக்களப்பில் இயங்கி வரும் உளநல உதவி நிலையம் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் 24 திகதியன்று தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் சிறுவர் நன்னடத்தை பிரிவின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 15 சிறுவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தலா 40ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்பும் நோக்கத்திற்காகவே இவ்வாறான உதவிகள் வழங்கப்படுவதாக இதன் திட்ட உத்தியோகத்தர் தெரிவித்தார்.
இதன் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி பாடசாலை சென்று கற்றல் நடவடிக்கையை ஆர்வத்துடன் மேற்கொள்ள பெற்றோர்களாகிய நீங்களும் திறம்பட ஊக்கமளிக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும், வாழ்க்கையில் வெற்றியடையலாம் எனவும் அறிவுரை கூறினார்.
இதற்கான நிதி அனுசரனையினை யுனிசெப் நிறுவனம் வழங்கியுள்ளதுடன் கிண்ணியா, தம்பலகாமம், மொரவெவ ஆகிய பிரதேச செயலகப்பகுதிகளில் இத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர,குறித்த நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட பொறுப்பதிகாரி ஐ.ஜே.சில்வெஸ்டார் மற்றும் பிரகலாதன், பத்மாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.