தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் ‘கார்த்திகை வாசம்’ என்ற மலர்க் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை(18) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
குறித்த மலர்க் கண்காட்சி தினமும் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை நடைபெறுகின்றது.
இம்மலர் முற்றத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தாவர உற்பத்தியாளர்கள் காட்சிக்கூடங்களை அமைத்துள்ளனர். இதனைத் தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதோடு மலர்ச் செடிகளையும் மரக்கன்றுகளையும் வாங்கிச் செல்கின்றனர்.
இதேவேளை தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வழமைபோன்றே இந்த ஆண்டும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு ஆலயங்களுக்கும் அதன் பழமுதிர்ச்சோலை திட்டத்தின்கீழ் இலவசமாகப் பழமரக்கன்றுகளை வழங்கி வருகிறது.
பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இக் கார்த்திகை வாசத்தில் காட்சிக்கூடங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27ஆம் திகதிவரை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.00 மணிவரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.