ஆஸி யுவதி கொலை – 23 கோடி ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய இளைஞர் கைது

அவுஸ்திரேலியாவில் யுவதியொருருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு, அவரை கைது செய் உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் (23.22 கோடி இலங்கை ரூபா / 5.21 கோடி இந்திய ரூபா) சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்திய இளைஞர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜ்விந்தர் சிங் எனும் 38 வயதான மேற்படி இளைஞர், டோயாஹ் கோர்டிங்லே எனும் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்.

அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாநிலத்திலுள்ள கெய்ன்ஸ் நகரில் 2018 ஒக்டோபர் மாதம் டோயாஹ் கோர்டிங்லே எனும் 24 வயது யுவதி மர்மமாக கொல்லப்பட்டிருந்தார்.

இவர் தனது நாயை அழைத்துக்கொண்டு நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து சென்றிருந்தார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

மறுநாள் வான்கெட்டி கடற்கரையில் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கொலை தொடர்பில் ராஜ்விந்தர் சிங் பிரதான சந்தேக நபராக குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் கருதுகின்றனர்.

அவர் இக்கொலை நடந்து 2 நாட்களின் பின் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளை விட்டுவிட்டு, சிட்னி வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என பொலிஸார் சந்தேகித்தனர்.

அவரின் கைது தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்னர் 3 பொலிஸ் அதிகாரிகள் இந்தியாவுக்கு சென்றிருந்தனர். எனினும் ராஜ்விந்தர் சிங் கைது அப்போது செய்யப்படவில்லை.

அதையடுத்து, ராஜ்விந்தர் சிங்கை கைது செய்ய உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை சன்மானம் வழங்கப்படும் என குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் இம்மாத முற்பகுதியில் அறிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பொலிஸாரால் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மிக அதிகமான சன்மானத் தொகை இதுவாகும்.

ராஜ்விந்தர் கண்டுபிடிக்கப்பட்டால் அவரை நாடு கடத்துமாறு அவுஸ்திரேலியா கடந்த வருடம் கோரிக்கை விடுத்திருந்தது. அக்கோரிக்கையை கடந்த மாதம் இந்திய அரசாங்கம் அங்கீகரித்திருந்தது.

இந்நிலையில், ராஜ்விந்தர் சிங் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில பொலிஸ் ஆணையாளர் கத்தரினா கரோல் இன்று வெள்ளிக்கிழமை (25) தெரிவித்துள்ளார்.

ராஜ்விந்தர் சிங் விரைவில் நீதிமன்றில் ஆஜராகுவார் எனவும் பொலிஸ் ஆணையாளர் கத்தரினா கரோல் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *