குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் உடல் பருமன் குறைவடைந்துள்ளது – சுகாதார அமைச்சு!

நாட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் உடல் பருமன் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவு நடத்திய ஆய்வில், துரித உணவு மற்றும் இனிப்பு பானங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளமை மற்றும்  மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை இதற்கு காரணமென தெரிவித்துள்ளது.

துரித உணவு சாப்பிடாமல் இருப்பது, இனிப்பு பானங்கள் பயன்படுத்துவதை குறைப்பது, குறுகிய பயணத்திற்கு முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தாமல் இருப்பது போன்றவற்றை செலவு அதிகரிப்பால் மக்கள் தவிர்த்தமை மக்களின் ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிள்ளைகளுக்கு துரித உணவுகளை வழங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் கீரைகளை வழங்குவதற்கு பெற்றோர்கள் நடவடிக்கை எடுப்பதும் இதன்போது அவதானிக்கப்பட்டுள்ளது.

நாட்டை உள்ளடக்கிய 105 கிராமிய சேவை அலுவலர் பிரிவுகளைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலைமை தொற்று அல்லாத நோய்களைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு திறம்பட பங்களிக்கும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு வரும் சர்க்கரை நோய், கல்லீரலில் கொழுப்பு சேருதல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த இந்த நிலை உதவிகரமாக இருக்கும் என அந்தப் பிரிவு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *