மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீளப்பெறப்பட்டது!

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) அடம்பன் பொலிஸாரால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டது.

இந்த வழக்கு குறித்து சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் கூறுகையில், ‘மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல திருத்தப்பணிகள் இடம் பெற்று வந்த நிலையில் மாவீரர் தினத்தை எதிர்வரும் தினங்களில் மன்னார் பிரதேச மக்கள் அனுஷ்டிக்க இருப்பதாகவும் இவ்வாறு பிரதேச மக்கள் இந்த மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் போது மீண்டும் ஒரு இனக்கலவரம் இனங்களுக்கிடையிலான முரண்பாடு இடம் பெறலாம் என்றும் எனவே அதற்கு தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நேற்றைய தினம் அடம்பன் பொலிஸாரால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை இன் பிரிவு 106 பிரகாரம் குறித்த வழக்கை ஏற்ற மன்னார் நீதவான் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு 24ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை மன்னார் நகர சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட 6 நபர்களின் பெயரை குறிப்பிட்டு இடைக்கால தடை ஒன்றை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அடம்பன் பொலிஸ் பொறுப்பதிகாரி இணைந்து நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த வழக்கை மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து குறித்த வழக்கை மீளப் பெறுவதாக தெரிவித்த நிலையில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்காக வழங்கப்பட்ட தற்காலிக தடை உத்தரவு தளர்த்த பட்டுள்ளது’ என கூறினார்.

அதே நேரம் குறித்த வழக்கின் இறுதி அறிக்கைக்காக இவ்வழக்கு இம்மாதம் 30ஆம் திகதி தவணை இடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *