முல்லைத்தீவு மாவட்ட நிதி, வேறு மாவட்டத்துக்கு மாற்றம்: ஸ்ரீதரன் குற்றச்சாட்டு

கொழும்பு,நவ 25

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அபிவிருத்தி திட்டமொன்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

மின்சக்தி, எரிசக்தி மற்றும் நீர் வழங்கல் ஆகிய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, குறித்த திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் நாடாளுமன்றில் வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பொருளாதார நெருக்கடியை அடுத்து உலக வங்கி உள்ளிட்ட முதலீடுகள் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இல்லாமல் போயுள்ளதாக அல்லது தாமதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த வேலைத்திட்டம் மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை அடுத்து, முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்கு அமைய அறிவிக்க முடியும்.

மக்களுக்கு குடிநீரை வழங்குவதை அடிப்படை உரிமையாக தாம் கருதுவதாகவும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *