உலகக்கோப்பை கால்பந்து: 3-1 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தியது செனகல்

தோகா, நவ 25

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் குரூப் ஏ-ல் இன்று நடைபெற்ற போட்டியில் கத்தார்- செனகல் அணிகள் மோதின. இந்த போட்டியில் செனகல் அணி சார்பில் பவுலே தியா ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் செனகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

அதன்பின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 48-வது நிமிடத்தில் பமரா ஒரு கோல் அடித்தார். அதன்பின் போட்டியை சமன் செய்யும் நோக்கில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கத்தார் அணிக்கு 78-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. முகமது முந்தாரி கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.

உலகக் கோப்பையில் கத்தார் அணியின் முதல் கோல் இதுவாகும். அதன்பின், கத்தார் வீரர்களுக்கு பதிலடி கொடுத்த செனகல் அணி 84-வது நிமிடத்தில் மற்றொரு கோல் போட்டது. பம்பா தியெங் இந்த கோலை அடித்தார். இதையடுத்து ஆட்டநேர முடிவில் செனகல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *