சமுர்த்தி மற்றும் கள உத்தியோகத்தர்களும் வாக்கு கோரலாம்

சமுர்த்தி மற்றும் கள உத்தியோகத்தர்களும் தேர்தலில் வாக்கு கோருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தேவையான சட்ட நிபந்தனைகளை தயார் செய்யுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஆலோசனைக் குழு நேற்று (25) ஒன்று கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கள உத்தியோகத்தர்களுக்கு தமது சொந்த தொகுதியிலேயே வேட்பாளர்களாக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான திருத்தங்கள் சட்ட வரைவுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகளில் ஈடுபடும் கிராம அலுவலர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே, தேசிய சட்டமன்றத்தின் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை மேற்பார்வையிட சிறப்பு சட்ட அமைப்பு ஒன்றை நிறுவுவது குறித்தும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் கூடிய தேசிய சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்காலத்தில் ஏற்படும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்வதற்கான கொள்கையை தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *