சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர் ஒருவரை இடமாற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி,உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர் ஒருவரை இடமாற்றம்செய்யுமாறு கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை பழைய மாணவர்களினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

இலங்க ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் குறித்த பாடசாலையின் ஆசிரியருமான பொ.உதயரூபனை குறித்த பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலைகள் கதவுகள் மூடப்பட்டு ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்செல்ல அனுமதிக்கப்படாமல் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் காரணமாக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு எதிர்கொண்டதை காணமுடிந்தது.

பாடசாலைக்கு வருகைதந்த ஆசிரியர்கள் பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்படாத காரணத்தினால் பாடசாலைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த வரவு குறிப்பேட்டில் கையொப்பங்களை இட்டதுடன் வெளியில் நீண்டநேரம் காத்திருக்கும் சூழ்நிலையேற்பட்டதுடன் பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் திரும்பிச்சென்றதையும் காணமுடிந்தது.

பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய பழைய மாணவர்கள்,பெற்றோர் குறித்த ஆசிரியரை இடமாற்றுமாறு கோரிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த ஆசிரியர் மீது 41குற்றச்சாட்டுகள் திணைக்களத்தினால் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் குறித்த ஆசிரியரை இடமாற்ற நடவடிக்கையெடுக்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தின் போது குற்றஞ்சாட்டப்பட்டது.

பாடசாலைகளில் பல குழப்பமான செயற்பாடுகளிளை குறித்த ஆசிரியர் முன்னெடுத்துவருவதுடன் அவரினால் பாடசாலையில் மாணவர்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் நிகழ்நிலையூடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்த ஆசிரியர்களும் குறித்த ஆசிரியரினால் அச்சுறுத்தப்பட்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது பாடசாலைக்கு வருகைதந்த ஆசிரியர்களுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதுடன் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டதனால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

ஒரு ஆசிரியரின் செயற்பாட்டுக்காக முழு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாதிக்கும் வகையில் செயற்படுவதை அனுமதிக்கமுடியாது எனவும் இதன்போது ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலரால் ஆசிரியர்கள் சிலர் அச்சுறுத்தப்பட்டதாகவும் இதன்போது ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியரும் பாடசாலைக்கு வருகைதந்திருந்த நிலையில் அவரை பாடசாலைக்குள் அனுமதிக்காமல் அவருக்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோசங்களை எழுப்பியதையும் காணமுடிந்தது.

இதேவேளை மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளரின் சார்பில் வருகைதந்த மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி சா.ரவிச்சந்திரா ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினால் வழங்கப்பட்ட மகஜரை மாகாண கல்வி பணிப்பாளருக்கு அனுப்பி நடவடிக்கையெடுப்பதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் பாடசாலை நுழைவாயில்களும் திறக்கப்பட்டன.

குறித்த ஆசிரியரின் செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சு உட்பட திணைக்களங்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளபோதிலும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி சா.ரவிச்சந்திரா தெரிவித்தார்.

இதேநேரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களை தாக்கமுற்பட்டதாக கூறி ஆசிரியர்கள் சிலரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களை அச்சுறுத்தியதாகவும் தாக்கமுற்பட்டதாகவும் கூறி இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *