ஈழத்தமிழத் தேசத்தில் ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட ‘நிலம்’ குறும்படம் சிறந்த விருத்தை வென்றுள்ளது.
தமிழ்நாட்டின் நீலகிரி ஃபிலிம் கிளப் மற்றும் பி.சி டி.வி – நெட்வொர்க் அமைப்புகள் நடத்துகின்ற ஊட்டி குறும்பட விழாவிலேயே 2021ஆம் ஆண்டின் சிறந்த குறும்படத்துக்கான விருத்தைப் வென்றுள்ளது.
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் இவ்வாறான பேசுபொருளைக் கொண்ட கதையொன்றை படமாக்குவது என்பது பெரும் சவாலாக இருந்துள்ளதோடு, கிடைக்கக்கூடிய வெளியில் நுட்பமாக படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான திரைப்பிரிவில் Morehouse College Human Rights Film Festival (அமெரிக்கா), International Panoramic Film Festival of India (இந்தியா), Colombo Human Rights Film Fest (இலங்கை) பங்கெடுத்திருந்தது. Jaffna International Cinema Festival விழாவில் பங்கெடுத்திருந்தது. 2022ம் ஆண்டுக்கான திரைவிழாவிற்கு Paris International Film Awards இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.
இந்நிலையில் 32 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கெடுத்திருந்த ஊட்டி குறும்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருத்தை பெற்றுள்ளது.
புலம்பெயர் தமிழர்களிடையே பிரசித்தி பெற்ற ‘படலைக்கு படலை’ தொலைக்காட்சி தொடரின் இயக்குநரும், சமூக, அரசியல் செயற்பாட்டாளருமாகிய ஊடகர் சுதன்ராஜ் இக்குறும்படத்தை தயாரித்து எழுதியிருந்தார்.
ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் சார்பில் குணா ஆறுமுகராசா ஒருங்கிணைத்திருக்க, கதிர்; இயக்கியிருந்தார்.
இந்நிகழ்வில், ‘நிலம்’ குறும்பட குழுவினர் சார்பில் விருத்தைப் பெற்ற படத்தின் துணை இயக்குநராகிய ஜெனோசன் ‘ஈழத்துக்கான திரைத்துறையொன்றை உருவாக்க வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளதாக தெரிவித்திருந்தோடு, அம்முயற்சிகளுக்கு மிகப்பெரும் அங்கீகாரம்’ என குறிப்பிட்டிருந்தார்.
நிலம் குறும்படம் பல சர்வதேச திரைவிழாக்களில் பங்கெடுத்து வரும் நிலையில், விரைவில் பொதுத்தளத்தில் பார்வைக்கு வெளியிடப்படும் என வளரி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

