வவுனியா நகரப்பகுதியில் வெடித்த காஸ் அடுப்பு! தப்பிப்பிழைத்த பெண்ணொருவர்

வவுனியா நகரப் பகுதியில், பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.

நேற்று (06) திங்கட்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா – சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் அடுப்பு வெடித்துள்ளது.

குறித்த பெண் காஸ் சிலிண்டர் அடுப்பு அண்மைக்காலமாக வெடிப்பதால் அவதானமாகவும், முன் எச்சரிக்கையுடனும் இருந்தமையால் உடனடியாக சிலிண்டரை அணைத்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

குறித்த வெடிப்பின் போது காஸ் சிலிண்டர் அடுப்பு உடைந்து சேதமாகியுள்ளது.

இருப்பினும், வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் இது தொடர்பில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *