கல்முனை மாநகரசபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்!

கல்முனை மாநகரசபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்!

செல்லையா பேரின்பராஜா

கல்முனை வாழ் தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசையாக இருந்துவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ள  கல்முனை மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத்திட்டம் நாளை (08.12.2021) சமர்ப்பிக்கபப்டும்போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி கிளையின் செயலாளர் சி.ஜெயக்குமார் இலங்கை தமிழரசுக்ட்சியின் வாலிபர் முன்னணியின் துணைச்செயலாளர் அ.நிதான்சன் ஆகியோர் கல்முனை ஊடக மையத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றித்து பயணிக்க வேண்டும் என்று செயற்பட்டு வருகின்றனர். எனினும் கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரீஸ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதை தடுப்பதற்காகவே தான் இருபதாவது அரசியலமைப்புக்கும் அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவு வழங்கியதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும்  பகிரங்கமாக கூறியுள்ளார் .
இதே போன்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹாபீஸ் நஸீர் அகமட் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை பாராளுமன்றத்தில் அப்பட்டமாக கூறியுள்ளார். தமிழ் மக்கள் போட்ட பிச்சையினால் தான் முதலமைச்சராக இருந்ததை மறந்து இனவாதம் கக்குகின்றார்.
கல்முனை மாநகரசபையானது தமிழ் பிரதேசங்களை பல வழிகளிலும் புறக்கணிப்பு செய்து வருவதனை இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அரச கட்டமைப்பின் நிருவாக நடைமுறையினை முறையாக மேற்கொண்டு வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 1989 ஆம் ஆண்டில் இருந்து குறைமாத குழந்தைபோல் உள்ளது. 200 க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்களும் 29 கழராம சேவகர் பிரிவுகளை உடைய இப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தடையாக உள்ளவர்களுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆதரவு வழங்குவார்களாயின் கல்முனை வாழ் பொது மக்களும் குறிப்பாக இளைஞர்களும் எதிர்காலத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதையும் இத்தருணத்தில் கூறிக்கொள்கின்றோம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *