பசிலின் திடீர் இந்திய விஜயம் – சபையில் கேள்வியெழுப்பிய ரணில்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திடீர் இந்திய விஜயம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், நிதியமைச்சரின் திடீர் இந்திய விஜயம் கவலையளிப்பதாகவும் கூறினார்.

மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எந்தவொரு நிதி அமைச்சரும் நாட்டை விட்டு வெளியேறியதில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார மீட்சிக்கான அனைத்து நிதி விவரங்கள் மற்றும் திட்டங்களை சபையில் முன்வைக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் நிதி அமைச்சருக்கும் உள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நாட்டின் தற்போதைய வெளிநாட்டு கையிருப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் சில நாட்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அதற்கான ஆவணம் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *