வவுனியா நகரில் ஒரே இரவில் ஐந்து கடைகளில் திருட்டு

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில், ஒரே இரவில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வவுனியா மில்வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதி, கந்தசாமிகோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களிற்கு சென்ற திருடர்கள், அவற்றின் கூரைத்தகடு மற்றும் வாயிலை உடைத்து உள்நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு, குறித்த கடைகளை அதன் உரிமையாளர்கள் மூடிச்சென்றிருந்த நிலையில், இன்று காலை மீண்டும் திறப்பதற்காக வருகைதந்தபோது, கடைகள் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அக்கடைகளின் உரிமையாளர்கள், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் இன்று அதிகாலை வேளையில், இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்  என பொலிஸார் சந்தேகிப்பதுடன், குறித்த கடைகளில் இருந்து பல இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சீ.சீ.டீ.வி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *