
யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்ட கரையோரங்களில் கடந்தவாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை. காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில், அடையாளம் தெரியாத சடலங்கள் கரை ஒதுங்குகின்றமை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
கடற்கரைகளில் சடலங்கள் ஒதுங்குகின்றன என்றால், கடலில் விபத்துக்கள் இடம்பெற்றிருக்கவேண்டும். அவ்வாறில்லையெனில், இலங்கை மீனவர்கள் அல்லது இந்திய மீனவர்களின் மீன்பிடி படகுகள் விபத்துக்குள்ளாகியிருத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு விபத்துக்கள் நடைபெற்றனவாக தகவல்கள் இல்லை. அரசாங்கம் எந்தவித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை.
அதனால் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அச்சத்தில் உள்ளனர். கரையொதுங்கியுள்ள சடலங்கள் பற்றிய தகவல்களை மக்களுக்கு விரைந்து வழங்கவேண்டும். பொலிஸார், கடற்படையினர் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த இரு தரப்பினருமே சடலங்கள் கரையொதுங்கும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தி, அதன் உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டும் – என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.