பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை!

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான (இறுதி) வாக்கெடுப்பு நாளை வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 13 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதிவரை 7 நாள்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, 22 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்படி 2ஆம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 73 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்பின்னர் நவம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை (மூன்றாம்வாசிப்பு) ஆரம்பமானது.
நாளை நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது பதிலளித்து உரையாற்றவுள்ள நிதி அமைச்சர் பாதீட்டில் திருத்தங்கள் செய்ய இருப்பின் அவை தொடர்பான அறிவிப்புகளை விடுப்பார்.

அதன்பின்னர் மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன எதிராக வாக்களித்தன. அரசும் அதன் தோழமைக்கட்சிகளும் ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *