உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையின் பொருத்தமான சீர்திருத்தங்களை இனங்கண்டு தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டத்தில் ஆணைக்கழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் 2022 மார்ச் 20ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை தேர்தல்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு குறைந்தது 04-மாதங்களுக்கு முன்னதாகவே தயார்படுத்துவது இன்றியமையாதது என தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதன்போது மேலும் வலியுறுத்தினார்.

நிமல் புஞ்சிஹேவாவின் கருத்துப்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போதைய சட்ட நிலைமைக்கு மாற்றமின்றி நடத்தப்பட வேண்டுமானால், தேர்தலுக்கான திகதிகள் 2022 ஜனவரியில் அறிவிக்கப்பட வேண்டும் என கருதப்படுகிறது.

நாடாமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *