எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற , சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோடு, தற்கால உலகை வெற்றிகொள்வதற்கு அவசியமான ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.
நமது பல்கலைக்கழகங்களால், ஏற்கெனவே பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர் தொகையைப் பத்தாயிரத்தால் அதிகரித்தமை தற்போதைய அரசாங்கம் அடைந்த பாரிய வெற்றியாகும் என தெரிவித்துள்ளார்