பெய்ஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை: ஜனாதிபதி மக்ரோன்!

2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அத்தகைய எந்த நடவடிக்கையும் முக்கியமற்றதாகவும் வெறும் அடையாளமாகவும் இருக்கும் என மக்ரோன் தெரிவித்தார்.

அத்துடன், ஒலிம்பிக்கை அரசியலாக்கக் கூடாது என்றும், பயனுள்ள விளைவை கொண்ட செயல்களை தான் விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், விளையாட்டுகளின் தொடக்கத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு அரசாங்கப் பிரதிநிதிகளை அனுப்பப் போவதில்லை என்று கூறியுள்ளன.

உய்குர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும்.

ஹொங்கொங்கில் அரசியல் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை மற்றும் சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் பற்றிய கவலைகள் தொடர்பாகவும் முறுகல் நிலை நீடிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *