பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருதல் 16 நாள் செயற்பாட்டின் ஒரு பகுதியாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பகுதியில் நடைபவணியொன்று இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (09) அபயபுர சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவணியானது உவர்மலை ஆளுனர் அலுவல முன்றலில் உள்ள மைதானத்தை சென்றடைந்தது.
பெண்களை பாதுகாப்போம், உலக வேலைத் தளங்களில் பாலியல் வன்முறைகளை முடிவுறுத்தல், பெண்களுக்கான சமத்துவத்தை பெற்றுக் கொடுப்போம், பெண்கள் மீதான வன்முறைகளுக்கான தீர்வுகள் உடனடியாக வழங்கப்படவேண்டும், பெண்கள் மீதான வன்முறைகள் சிறப்பு நீதிமன்றங்கள் ஊடாக விசாரனை செய்யப்பட வேண்டும் உட்பட பல வாசகங்களை உள்ளடக்கிய வகையில் பதாகைகளை ஏந்தியவாறு நடை பவனியாக பிரதான வீதி ஊடாக சென்றனர்.
உலகளாவிய ரீதியில் பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதனையும் அவர்களை பாதுகாப்பதனை உறுதி செய்யும் வகையிலும் உலக மக்களை வலுவூட்டும் செயற் திட்டமாக ஆண்டு தோரும் கார்த்திகை மாதம் 25 ம் திகதியிலிருந்து மார்கழி 10 வரை 16 நாட்கள் பெண்களின் ஆதரவுக்கான அணிதிரட்டும் காலமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இத்தகைய காலப் பகுதியில் பெண்களின் நலன்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,பிரச்சினைகள் உரிமை மீறல்களை உலகரியச் செய்யும் நோக்கில் இத் தினங்கள் காணப்படுகிறது.
இத்தினத்தினை நினைவு கூறும் முகமாக இவ்வாறான விழிப்புணர்வு நடை பவணி இடம் பெற்று வருகின்றது .
பெண்களின் உரிமைகள் சிறுவர்களை மேம்படுத்தும் நோக்குடன் இந்த செயற்பாடு அமையப் பெற்றுள்ளது .
மூதூர், வெருகல்,குச்சவெளி,தம்பலகாமம் உள்ளிட்ட இடங்களிலும் இவ்வாறான திட்டம் முன்னர் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் இதன் போது உவர்மலை மைதானத்தில் பெற்றதுடன் கலை நிகழ்வுகளும் மேடைகளை அலங்கரித்தன.
மஞ்சல் நிற பலூன்களை அனைவரினதும் முன்னிலையில் வன்முறைகளை ஒழிக்க ஒரே நேரத்தில் உறுதிபூணப்பட்டது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் தனேஸ்வரனிடம் மகஜர் ஒன்றும் இதன் போது திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் தலைவி சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமாரால் கையளிக்கப்பட்டது.
இதன்போது, பல பெண்கள், அரச அதிகாரிகள் என பலரும் குறித்த நடைபவணியில் கலந்து கொண்டனர்.