கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீமுக்கு திருகோணமலை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (10) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் படகுப்பாதை கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிண்ணியா பொலிஸாரினால் குறித்த படகுப்பாதையில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் நான்காவது சந்தேகநபராக குற்றம் சுமத்தப்பட்ட கிண்ணியா நகர சபைத் தவிசாளரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த தவிசாளர் சுகவீனமுற்ற நிலையில் அதற்கான மருந்துகளைப் பயன்படுத்தி வருவதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரான கிண்ணியா நகர சபைத் தவிசாளரை பிணையில் விடுவிக்குமாறும், எதிர்வரும் 16ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் பயாஸ் ரசாக் உத்தரவிட்டார்.