பொத்துவில் சங்கமன்கண்டியில் புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலை!

அம்பாறைமாவட்டம், பொத்துவில்பிரதேச சங்கமன்கண்டி படிமலையடி வாரத்தில் இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபர்களினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை அப்பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த புத்த சிலையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி அரசியல் வாதிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவைத்தாவது, அம்பாறைமாவட்ட பொத்துவில் பிரதேச செயலாளரின் நிர்வாக எல்லைக்குட்பட்ட தாண்டியடி சங்கமன்கண்டி படிமலை அடிவாரத்தில் இரவோடு இரவாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தாண்டியடி மற்றும் சங்கமன்கண்டி கிராம மக்கள்  புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புத்தர் சிலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரியும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருக்கோவில்  பொலிஸார் கலவரங்கள் எற்படாதவாறு நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

திருக்கோவில் பொத்துவில் காரைதீவு ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உதவி தவிசாளர் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தனர்.

மக்கள் பிரதிநிதிகள் பொத்துவில் மூகுது மஹா விகாராதிபதியிடம் புத்தர் சிலையை அகற்றுமாறு கலந்தரையாடல்களில் ஈடுபட்டபோதும் பௌத்த துறவி இவ்விடம் தமக்கு உரியது என தெரிவித்து அவர்களின் கோரிக்கையை மறுத்திருந்தார்.

இதனையடுத்து காரைதீவு தவிசாளர் கே.ஜெயசிறீல், திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் பொத்துவில் உதவி தவிசாளர் பார்த்தீபன் உட்பட பல பிரமுகர்களும் மற்றும் கிராம மக்களும் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *