அரச துறை நிறுவனங்களுக்கான வினைத்திறனான சேவையை மதிப்பிடும் பொருட்டு தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தால் 2018/2019ம் ஆண்டினை தழுவி நடாத்தப்பட்ட 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ். மாவட்ட செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
அரச துறையில் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 14 பிரதேச செயலகங்களும் வெற்றி பெற்றுள்ளது.
தெல்லிப்பளை பிரதேச செயலகம் முதலாம் இடத்தினையும் யாழ்ப்பாணம், தென்மராட்சி, பருத்தித்துறை பிரதேச செயலகங்கள் இரண்டாம் இடத்தினையும் சண்டிலிப்பாய், கோப்பாய், கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.
அந்தவகையில் யாழ் மாவட்ட செயலகம் தேசிய ரீதியாக மாவட்ட தரப்படுத்தலில் முதலிடம் பெற்றிருப்பதுடன் பங்குபற்றிய 14 பிரதேச செயலகங்களும் பொதுமக்கள் சேவை வழங்கலில் சிறந்த அங்கீகாரத்திற்கான அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் ,
இவ்வெற்றியானது யாழ் மாவட்டம் முழுவதுமான நிர்வாக ரீதியாக கிடைத்த சிறந்த அங்கீகாரம் ஆகும்.
மேலும் இது ஒரு பொது மக்கள் சேவை வழங்கலில் உத்வேகம் மற்றும் ஊக்கத்தை மாவட்ட ரீதியாக எடுத்துக்காட்டுவதுடன், எதிர்காலத்திலும் வினைத்திறன் மற்றும் விளைதிறனான பொதுமக்கள் திருப்தியுரும் வகையில் சேவை வழங்கலில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவ்விருதினை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய மாவட்ட மற்றும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இச்செயற்பாட்டிற்கான பலமான உற்பத்தித் திறன் கட்டமைப்பினை வடிவமைத்து வழிகாட்டல்களை அவ்வப்போது வழங்கியிருந்த உற்பத்தித்திறன் குழுவினருக்கு விசேட பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.