
மன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர், கடலில் மூழ்கியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஒரு படகில் பயணித்துள்ளனர்.
இதன்போது, மன்னார்- பள்ளிமுனை கடற்பகுதியில் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார். அவரை கடல் நீர் இழுத்துச் சென்றுள்ளது.
இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லும் நபரை காப்பாற்ற இறங்கியவரையும் கடல் இழுத்துச் சென்றுள்ளது என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் படகில் இருந்த ஒருவர் மட்டுமே பள்ளிமுனை மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறித்த சம்பவத்தில் காணாமல் போனவர்கள் பருத்தித்துறையை சேர்ந்த தர்சன் மற்றும் செந்தூரன் எனவும் உயிர் தப்பியவர் ஜெரோம் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் பள்ளிமுனை கடற்பகுதியில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட ஆற்று நீரோட்டங்கள் இருப்பதாகவும் இதில் ஏதாவது ஒரு நீரோட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் என்று மன்னார் கடற்றொழில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.