அரசியல் தலைவர்கள் கூறும் அனைத்திற்கும் ‘ஆமென் ஆமென்’ என கூற முடியாது – கொழும்பு பேராயர்

அரசியல் தலைவர்கள் கூறும் அனைத்திற்கும் ‘ஆமென் ஆமென்’ என கூற முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு மற்றும் அதன் அறிக்கை ஒரு கேலிக்கூத்து போன்றது எனவும் அவர் விமர்சித்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கனேமுல்ல பொல்லாத்த தேவாலய பெருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், மதத் தலைவர்கள் அனைத்த சந்தர்ப்பங்களிலும் சுயாதீனமாக இருக்க வேண்டும் என்றும் மதத் தலைவர்கள் சுயாதீனத் தன்மையை அரசியல் நன்மைக்காக பயன்படுத்தினால் வெட்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் கூறும் அனைத்திற்கும் ‘ஆமென் ஆமென்’ என கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

இன்று மக்கள் நிர்க்கதியாகியுள்ளமைக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி மதத் தலைவர்களும் காரணமென சுட்டிக்காட்டிய பேராயர், இந்த நாடு மத நாடென்றும் குறிப்பிட்டார்.

இதேநேரம், ஈஸ்டர் தாக்குதல் குறித்து இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையில் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள போதிலும் அவர்களை இதுவரையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *