பர்முயுலா-1: முதல் முறையாக சம்பியனானார் மேக்ஸ் வெர்ஸ்டபேன்!

நடப்பு ஆண்டுக்கான பர்முயுலா-1 கார்பந்தயத்தின் இறுதி சுற்றில், முதலிடம் பிடித்ததன் மூலம் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதல் முறையாக சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முயுலா 1’ கார் பந்தயம், 22 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் இறுதி சுற்றான அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ், யாஸ் மெரினா சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 306.183 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 30 நிமிடங்கள் 17.345 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 26 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 2.256 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன், இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

5.173 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, பெர்ராரி அணியின் வீரரான கார்லோஸ் செய்ன்ஸ் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்த அனைத்து சுற்றுகளின் முடிவில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் 10 வெற்றிகளுடன் 395.5 புள்ளிகளுடன் சம்பியன் பட்டத்தை வென்றார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹமில்டன் 8 வெற்றிகளுடன் 387.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், ஒரு வெற்றியுடன் 226 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *