கோந்தைப்பிட்டி கடலில் காணாமல் போன இரண்டாவது நபரும் சடலமாக மீட்பு! முழுவிபரம்

மன்னார் – கோந்தைப்பிட்டி கடலில் காணாமல் போன இரண்டாவது நபரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மன்னார் – கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் காணாமல் போன நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் மற்றைய நபர், இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 19 வயதுடைய தர்ஷன் என்பவர் நேற்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார்.

அதே இடத்தைச் சேர்ந்த 28 வயது செந்தூரன் என்கின்ற இரண்டு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் நேற்று திங்கட்கிழமை மாலை வரை குறித்த மீனவர் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தெரியவருகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் மூன்று மீனவர்கள் கோந்தை பிட்டி கடலில் தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர்.

படகில் வெளி இணைப்பு இயந்திரத்தை இணைந்து படகை செலுத்தி பார்த்துள்ளனர்.இதன் போது குறித்த படகில் மீனவர்கள் உட்பட 8 பேர் இருந்துள்ளனர்.

படகின் வெளி இணைப்பு இயந்திரம் திடீரென இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது.

இதன் போது காற்றின் காரணமாக படகு கடலில் சென்று கொண்டிருந்தது. படகின் முன் அணியத்தில் நின்ற ஒருவர் திடீரென கடலில் வீழ்ந்து கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றைய மீனவர் அவரை காப்பாற்ற கடலில் குதித்துள்ளார்.

எனினும் குறித்த மீனவரும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

ஏனையவர்கள் போராடியும் குறித்த இருவரையும் மீட்க முடியவில்லை.நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் இயங்கிய நிலையில் இவர்கள் கரை திரும்பி ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு வரை மீனவர்கள் மீட்கப்படவில்லை.

ஆனாலும் நேற்று காலை வரையில் மீனவர்கள் கடலில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கோந்தை பிட்டி கடலில் இருந்து சற்று தொலைவில் தர்ஷன் (வயது-19) என்பவர் மீட்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீனவர்களால் மீட்கப்பட்டு கோந்தைப்பிட்டி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

மற்றைய மீனவரை மீனவர்கள் தேடிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *