வவுனியா தனியார் பேருந்தில் பெண்ணொருவர் தவறவிட்ட தங்கநகை உள்ளட்ட பையை, சாரதி ஒருவர் அவரிடம் ஒப்படைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நேர்மையான நடவடிக்கையை பலரும் பாராட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்
வவுனியா மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட ND- 7038 இலக்கமுடைய பேருந்தில் பயணம் மேற்கொண்ட கிளிநொச்சி நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் பேருந்திலிருந்து இறங்கும்போது தவறுதலாக தனது கைப்பை ஒன்றினை பேருந்தில் தவறவிட்டு இறங்கியுள்ளார்.
அதனை பார்வையிட்ட தனியார் பேருந்தின் சாரதியும், உரிமையாளருமான கே.ஜீவானந்தபவனினால் பேருந்தில் கைவிடப்பட்ட குறித்த கைப்பை, வவுனியா மாவட்ட பேருந்து சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது .
இதையடுத்து கைப்பையில் காணப்பட்ட அடையாள அட்டை ஆவணத்தின் முகவரிக்கு குறித்த உரிமையாளருடன் தொடர்புகொண்டு அவர் பேருந்தில் தவறவிட்ட ஐந்து பவுண் தாலிக்கொடி மற்றும் மூன்று வங்கி புத்தகம் என்பவற்றை உரிமையாளரூடாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் அலுவலகத்தில், பேருந்து சங்கத்தின் தலைவர் சு.இராஜேஸ்வரினால் உரிய பெண்ணிடம் கைப்பை ஒப்படைக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு தவறவிட்ட தங்க நகை உட்பட ஆவணங்களை மீண்டும் ஒப்படைத்த பேருந்து சாரதியின் நேர்மையான நடவடிக்கை, தங்க நகைகளை பறிகொடுத்த பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.