ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

ஜனாதிபதியினுடைய ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால், எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திணிக்காதே திணிக்காதே ஆணைக்குழுக்களை திணிக்காதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், வேண்டாம் வேண்டாம் மரண சான்றிதழ் வேண்டாம், வேண்டாம் வேண்டாம் இழப்பீடும் வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதா இந்த விடயம் தொடர்பாக கூறியுள்ளதாவது, “கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை, வவுனியா மாவட்ட செயலகத்தில் சந்திப்பதாக அறிவித்திருந்தார்கள்.

ஆனால், அந்த தகவலின்படி இதுவரை நேரமும் அவர்கள் வருகை தரவில்லை. எந்தவித ஆணைக்குழுக்களும் தேவையில்லை, உள்ளக விசாரணைகளும் தேவையில்லை, சர்வதேச விசாரணையே தேவையென 12 வருடமாக போராடி கூறிக்கொண்டு வருகின்றோம்.

எத்தனையோ ஆணைக்குழுக்கள் வந்தும் பதிவுகளை மேற்கொண்டு செல்கிறார்களே தவிர எந்தவிதமான நீதியும் வழங்கப்படவில்லை.

நீதிக்கு பின்புதான் எது என்றாலும், ஆகவே சர்வதேச விசாரணையே வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *