சட்டத்தரணியாகக் கடமையேற்று 10 ஆண்டுகளைக் கடந்து சிரேஸ்ட சட்டத்தரணி என்ற அங்கீகாரத்தைப் பெறும் இந்நாளில், இனப்படுகொலையால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்த் தேசத்தில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களைப் பேணவும் இலவசமாகச் சட்டஞ்சார் சேவைகளை வழங்கவும் ‘தமிழர் உரிமைகள் காப்பகம்’ என்கின்ற அமைப்பு தமிழ்த் தேசியப் பற்றுமிக்க சட்டத்தரணிகளின் ஒருங்கிணைந்த பங்குபற்றலோடு அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணியாக கடமையேற்று 10 ஆண்டுகள் நிறைவையொட்டி, இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், குறிப்பாக வடக்கு, கிழக்கில் இப் பணிகள் ஆரம்பமாகின்றன. இதுவே என் இனத்திற்கு ஆற்றவேண்டிய அதிகபட்சக் கடமையாக உணர்கின்றேன்.
இந்நாளில் என்னை வளர்த்துவிட்ட அத்தனை உறவுகளையும் ஆசான்களையும் விரிவுரையாளர்களையும் சிரேஸ்ட சட்டத்தரணிகளையும் நன்றியுணர்வுடன் திரும்பிப் பார்த்துத் ‘தமிழர் உரிமைகள் காப்பகத்தை’ தமிழ்த் தேசத்திற்கு அர்ப்பணிக்கின்றேன்.
மேலும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் கோடி நன்றிகள் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
