ஐக்கிய தேசிய கட்சியின் கடந்தகால செயற்பாடுகள் காரணமாகவே அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. எனவே ஐக்கிய மக்கள் சக்தியின் தனி அரசாங்கமே உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் பலர் எம்முடம் இணைந்துகொள்ள தயாராக உள்ளனர். ஆனால் அவர்களை இணைத்துக்கொள்ள நாம் தயாரில்லை.
எமது தலைவர் ஊழல்வாதியல்ல, எமது கட்சியின் உறுப்பினர்கள் தூய்மையானவர்கள். அதுமட்டுமல்ல நாம் தெளிவான கொள்கையை வகுத்துள்ளோம். வெளிப்படையான விமர்சனம் இருந்தாலும் கூட எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
எம்மால் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் கட்சிகள், மலையக கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியும். மக்கள் மத்தியில் இவர்கள் ஊழல் வாதிகள் என்றோ அல்லது சர்ச்சைக்குரிய தரப்பெனவோ விமர்சிக்கப்படுவதில்லை.
அதேபோல் சிறிலங்கா சுதந்திர கட்சியிலும் பல தூய்மையான அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களையும் இணைத்துக்கொண்டு பரந்த அணியாக பலமான அரசாங்கத்தை அமைக்க முடியும்.
ஆனால் ரணில், மைத்திரியுடன் இனி ஒருபோதும் ஒன்றிணைந்து பயணிக்க முடியாது. இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல. கட்சியின் பொது நிலைப்பாடும் இதுவேயாகும்.
ஆகவே, நல்லாட்சியை நாசமாக்கிய ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவுடன் இனி ஒருபோதும் கூட்டணிக்கு நாம் தயாரில்லை.
ராஜபக்சவினரின் அரசாங்கம் உருவாகியபோது மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்த போதிலும் இன்று மக்களால் இந்த நாட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஒரு சில ஆண்டுகளில் நாடு மோசமான நெருக்கடி நிலைமையை சந்திக்கப்போகின்றது என்ற அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமைகளில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டியுள்ளது. இது நீண்டகால போராட்டமாக அமையாது,
அடுத்த தேர்தலில் அரசாங்கத்தை அமைப்போம். அதுவே எமது இலக்கு. அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயுவை தரையிறக்க வேண்டாம்: நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு!