முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள பிரிவினரால் மாற்றுவலுவுடையவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை தனியார் நிறுவனங்களில் பெற்றுக்கொடுப்பதற்கான தொழிற்சந்தை இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (15)புதன்கிழமை காலை 9.00மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த தொழிற்சந்தையினை உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது பதிவுசெய்யப்பட்ட எட்டு தனியார் கம்பனிகள் கலந்து கொண்டதுடன் எழுவது பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், நேர்முகத்தேர்வினை எதிர்கொள்ளும் முறைகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு நிறுவனங்களும் தகுதியுடைய குறிப்பிட்டோரை பணிக்கு உள்வாங்கவுள்ளதோடு, அவர்களுக்கான போக்குவரத்து செலவாக ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்கள பிரிவின் இணைப்பாளர் ஜெ.துஷிராஜ் மற்றும் உத்தியோகத்தர்கள், குறித்த தனியார் கம்பெனிகளின் முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.