பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எழுத்தாளரும், கவிஞருமான அஹ்னப் ஜஸீம் புத்தளம் மேல்நீதிமன்றத்தினால் இன்று (15) பிணையில் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
“நவரசம்” எனும் கவிதைப் புத்தகத்தில் உள்ள “உருவாக்கு” எனும் கவிதை மூலம் தீவிரவாத செயற்பாட்டை ஊக்குவித்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கவிஞர் அஹ்னப் ஜஸீம் கடந்த வருடம் மே மாதம் 16 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு 8 இலக்க நீதவான் நீதிமன்றத்தில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் 7 (2) அத்தியாயம் பிரகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவ்வாறு தொடர்ச்சியாக விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அஹனப் ஜஸீம் தொடர்பில் , கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் புத்தளம் மேல்நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
இந்த நிலையில், அவரது வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், ஒவ்வொரு மாதமும் முதலாவது மற்றும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தளம் ரி.ஐ.டி பிரிவில் ஒப்பமிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றினை மையப்படுத்தி, புத்தளம் மேல்நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு, மீண்டும் அவர் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதேவேளை, எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி அஹ்னப் ஜெஸீம் அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.