பாடசாலையில் தனது மகனை அடித்துத் துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்த பெண்ணொருவர், வகுப்பறையில் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் ஒன்று கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா – வெயாங்கொடை பிரதேசத்திலுள்ள பாடசாலையில், கடந்த வாரம் ஆசிரியர் ஒருவர் ஒழுக்காற்றுப் பிரச்சினை காரணமாக மாணவர் ஒருவரை தண்டித்துள்ளார்.
இதனை அறிந்த குறித்த மாணவரின் பெற்றோர், பாடசாலையின் அதிபரை சந்தித்த நிலையில் இச்சம்பவம் தொடர்பில் அதிபர் விளக்கப்படுத்தியுள்ளதுடன் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து மாணவரின் பெற்றோர் பாடசாலையிலிருந்து வெளியேறி செல்ல முற்பட்டுள்ளார்.
எனினும், தரம் நான்காம் வகுப்புக்கு சென்று அங்கு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆசிரியரின் கன்னத்தில் மாணவனின் தாய் அறைந்துள்ளார்.
இதன் காரணமாக பாடசாலை நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியுள்ளனர்.
இதையடுத்து, வெயாங்கொடை பொலிஸார் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையில் சுமூக நிலைமையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.