மாதம்பை ஈரட்டக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர்.
கந்தானை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மகனும், 54 வயதுடைய தாயுமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் அநுராதபுரத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் கந்தானை பகுதியை நோக்கிப் பயணம் செய்த போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாதம்பை ஈரட்டக்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள பெரிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவ்விருவரும் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெதும் குமாரவின் ஆலோசனையில் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.