அமெரிக்க தூதரை சந்தித்த கூட்டணியினர்! அமெரிக்கா வருமாறு மனோவிற்கு அழைப்பு

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர், அமெரிக்க தூதரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பின் போது, தற்போது நடைபெறும் தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாடு, தேசிய அரங்கில் மலையக தமிழ் மக்களின் எழுச்சி, இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் அமெரிக்காவின் பங்கு, பொறுப்புகூறல், எதிர்வரும் ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டங்கள் ஆகியவை பற்றி உரையாடப்பட்டுள்ளன.

புதிய வருடத்தில் அமெரிக்காவில் இருந்து அரச பிரமுகர்கள், அதிகாரிகள் இலங்கை வர உள்ளதாகவும், அவர்கள் தமுகூ உட்பட இலங்கையின் அனைத்து தரப்பினரையும் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் அமெரிக்க தூதர் தெரிவித்தார்.

அதேபோல் அமெரிக்கா வந்து ராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்கும்படி, மனோ கணேசன் எம்பிக்கு அமெரிக்க தூதர் அழைப்பு விடுத்தார்.

இதன்போது, தற்போதைய தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டின் பின்னர், தேசிய,சர்வதேசிய அரங்குகளில் நாம் முன்வைக்க உள்ள, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் பொது கோரிக்கை, யோசனைகள் அடங்கிய ஆவணத்துடன் நாம் சர்வதேச சமூகத்தை காத்திரமாக எதிர்கொள்வோம் என மனோ கணேசன் பதிலளித்தார்.

இந்த சந்திப்பில், அமெரிக்க தரப்பில் பதில் தூதுவர் மார்டின் கெலி, பதில் துணை தூதர் சுசன் வோல்க், அரசியல் அதிகாரி ஜெப்ரி சனின் ஆகியோரும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தலைவர் மனோ எம்பியுடன், தமுகூ நிதி செயலாளர் கண்டி மாவட்ட எம்பி வேலு குமார், பொது செயலாளர் சந்திரா சாப்டர், இணை தவிசாளர் பேராசிரியர் விஜயசந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *