வடக்கில் சீனா செய்யும் அபிவிருத்தி திட்டங்களால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது பொய்! தாங்கள் அயலவர்கள் என்கிறார் சீனத் தூதுவர்

இந்தியாவும் சீனாவும் ஒரே எல்லையில் இருக்கும் நாடுகள். இந்தியாவிலும் சீன நிறுவனங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்றன.இப்படி இருக்க வடக்கில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களால்
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று எழும் கருத்துக்களில் அர்த்தமில்லை. அவை போலியான கருத்துக்கள்.’

இவ்வாறு நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரத்தியேக சந்திப்பொன்றில் தெரிவித்தார் சீனத் தூதுவர் கீஷங் ஹொங். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சீனா இலங்கையில் திட்டங்களை முன்னெடுப்பது இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தமிழ் அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்து குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கு தொடர்ந்து பதிலளித்த தூதுவர்,

சீனாவால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை. நாங்கள் அயலவர்கள். ஒரே எல்லைக்கோட்டில் உள்ளவர்கள்.இது தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவிடம் ஏதோ ஒரு விடயத்தை எதிர்
பார்த்து அதனை பெறுவதற்காக சீனாவைக் காட்டி அச்சுறுத்துகிறார்கள்.

தீவகத்தில் சீனா செயற்படுத்தவுள்ள மின் திட்டங்கள் காற்றாலை, சூரிய ஒளி ஆகிய இரண்டும் சேர்ந்த மின் திட்டங்களாகும். அது கைவிடப்படவேயில்லை.

வெளிநாட்டு நேரடி முதலீடாக சீன நிறுவனங்கள் இந்த முதலீட்டைச் செய்கின்றன. தீவக மக்களுக்கான மின்விநியோகத்துக்காகவே இந்த திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

எதாவது ஒரு காரணத்தைக் காட்டி இலங்கை அரசு இந்த திட்டங்களை நிறுத்தினால் அது எதிர்காலத்தில் வேறு
வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு பெரும் பின்னடைவாகவே அமையும்.

இந்த மின் திட்டங்கள் இலங்கை அரசுக்கு ஒரு பரீட்சையைப் போன்றவை. இவற்றிலேயே எதிர்கால வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தங்கியுள்ளன-என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *