செலவினங்களைக் குறைப்பதற்கு 3 வெளிநாட்டுத் தூதரகங்களை மூட தீர்மானம்!

செலவினங்களைக் குறைப்பதற்கும் தேவையான அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்துக்கொள்வதற்குமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலங்கை மூன்று வெளிநாட்டுத் தூதரகங்களை மூடவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, ஜேர்மன் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகங்களை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அலுவலகங்களை நிர்வகிக்க ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரு துணைத் தூதரகங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நைஜீரியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்குள்ள தூதரகத்தை மூட தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜேர்மன் பிராங்பேர்ட்டில் உள்ள துணைத் தூதரகத்தின் செயற்பாடுகள் பேர்லினுக்கு மாற்றப்படும் என்று வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில், நைஜீரியாவில் மிஷனின் பணி தொடர முடியாது என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *