ஒரு இனத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை கேட்பது இனவாதம் அல்ல மாறாக இன்னும் ஒரு இனத்துக்கு கிடைக்க இருக்கின்ற நியாயமான உரிமையை கிடைக்காமல் தடுப்பதுதான் இனவாதமாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஹாபீஸ் நஸீPர் அஹமட் தெரிவித்தார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 2020ஆம் ஆண்டு சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக காணி பங்கீட்டில் பெரிய இனவாதம் இடம்பெற்றுள்ளது. ஒரு சமூகத்தை படுகுழியில் தள்ளிய விடயம் வடக்கில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றி இருக்கலாம், அது ஆயுத கலாச்சாரத்தில் இடம்பெற்றது.
ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது வேறு, அரசியல் அதிகாரங்களில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஸ்லீம் ஒருவர் இல்லாமல் போனது இந்த முறை மாத்திரம் தான். அப்படி இருந்த போதும் கடந்த காலங்களில் எமது காணிகள் எப்படி பறிபோனது. இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
இதனை பேச வேண்டிய தேவை உள்ளது. ஏன் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கனடாவில் அடிவாங்கி விட்டு இங்கு வந்து நாடாளுமன்றத்தில் பேசுகிறார், முஸ்லீம்களுக்கு நாட்டில் காணிகள் இல்லை. மட்டக்களப்பில் பிரச்சினை இல்லை. முஸ்லீம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து காணி இல்லை என்று சொல்லி நாடகம் ஆடுகிறோம்.
காணி இல்லை என்று சொல்லி எனக்கு அவர் சொன்னது பிரச்சினை இல்லை. அவர் சொன்ன கருத்திற்கு இந்த பிரதேசத்தில் இருந்து எவராவது ஏன் என்று கேட்காமல் கோமா நிலையிலா இருந்தீர்கள் என்ற கவலை தான் எனக்கு என அவர் தெரிவித்தார்.
கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, வெளிநாட்டு அமைச்சின் சாக் நாடுகளுக்கான பணிப்பாளர் என்.எம்.முஹம்மட் அனஸ், கல்வி அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.