நீதவான் வீட்டில் கத்திமுனையில் தாலிக்கொடியை அறுத்துச் சென்ற கொள்ளை கும்பல்

அக்கரைப்பற்றில் நீதவானின் வீட்டினுள் புகுந்த கொள்ளைக் கும்பல், கத்திமுனையில் தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அம்பாறை – அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீட்டின் யன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட நீதவானை தாக்கிவிட்டு, அவரின் மனைவியின் 11 பவுண் தாலிக்கொடியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்

மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிவரும் அக்கரைப்பற்று வை.எம்.சி. வீதியில் உள்ள அவரின் வீட்டில் உறக்கத்தில் இருந்தபோது, சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் யன்னலை உடைத்து கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளனர்.

இந்த நிலையில், உறக்கத்தில் இருந்த நீதவானின் மனைவியின் தாலிக்கொடியை அறுத்த சத்தம் கேட்டு உடன் எழுந்த நீதவான் கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, அவரின் கைகளில் கூரிய ஆயுதத்தால் குத்தி தாக்கியதில் நீதவான் காயமடைந்ததையடுத்து கொள்ளையர்கள் தாலிக்கொடியுடன் தப்பி ஓடியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

இதேவேளை, இந்த பகுதியில் கடந்த வாரம் இரு வீடடுகளில் உட்புகுந்த கொள்ளையர்கள் உறக்கத்தில் இருந்த இரு பெண்களின் தாலிக்கொடிகளை கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இதுவரை கொள்ளையர்களை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *