அரச தலைவர் தேர்தல் காலத்தில் கருத்தடை மருத்துவர் என்ற கதையை கையில் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தின் உண்மை நிலைமை தற்போது வெளியில் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முல்கிரியாக நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாதம், மதவாதத்தை சமூகத்திற்கு பரப்பி, முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தற்போது நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
பொய், மோசடி, ஏமாற்று மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தற்போதைய அரசாங்கம் மக்கள் மத்தியில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் ஷாபியை இலக்கு வைத்து அரச தலைவர் தேர்தல் காலத்தில் முன்னெடுத்த பாரிய பிரசாரத்தின் உண்மை என்ன என்பது தற்போது வெளியாகி வருகிறது.
மருத்துவர் ஷாபிக்கு செலுத்த வேண்டிய நிலுவைச் சம்பளத்தையும் செலுத்துமாறு பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் கீழ் நடக்கின்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.