இந்திய மீனவர்கள் கைதால் ராமேஸ்வரம் மீனவ கிராம மக்கள் சோகத்தில்.!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை ஒரே நாள் நள்ளிரவில் கைது செய்துள்ள நடவடிக்கையால், ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் தமிழக அரசு வழங்கும் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தென்னரசு, லியோன் பீட்டர், கருப்பையா உள்ளிட்ட ஆறு பேருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகுகளையும் அதில் இருந்த கோபி, சக்தி, பிரபு, குட்வின், கருமலையான், ராஜு உட்பட 43 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி துறை முகத்திற்கு அழைத்து சென்றனர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 43 மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் மீனவர்கள் பிடித்து படகுகளில் இருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

ஒரே நாள் நள்ளிரவில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சென்ற சம்பவத்திற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் மீனவர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இலங்கை பிரச்சனை காரணமாக பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு மாற்று தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்க செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி நல்ல தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், மீனவர்கள் சிறை பிடிப்பை கண்டித்து தமிழக மீனவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக ராமேஸ்வரம் மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றது ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *