நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பாக இரு பிரதான நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்குமாறு இரு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே விநியோகிக்குமாறு குறித்த இரு நிறுவனங்களுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சிவில் சமூக செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், எரிவாயு சிலிண்டர்களின் புதிய தொகுதிகளில் கலவையைக் குறிக்கும் ஸ்டிக்கர் ஒன்றைக் காட்சி படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.