சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கல்முனை பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ்.எச்.முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசல குணவர்தன உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை கல்முனை பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு சுகாதார நடைமுறைகளை அவதானித்துள்ளனர்.
மேற்படி விஜயத்தின் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கும் சென்றிருந்ததுடன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் குறித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை, பொதுச் சுகாதார செயல்பாடுகள், டெங்கு தொற்று நோய், தொற்றா நோயின் தாக்கம் உட்பட பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படுகின்ற சுகாதார சேவைகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் மற்றும் தேவைகள் குறித்தும் பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.
சுகாதார அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் இலத்திரனியல் ஆவண காப்பு, தரவு சேமிப்பு முறைமையை அமைச்சின் செயலாளர் இங்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்ட ‘அரண்’ சஞ்சிகையின் பிரதிகளும் அதிகாரிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
தேசிய உற்பத்தி திறன் விருதினை வெற்றிகொண்ட சம்மாந்துறை வைத்தியசாலைக்குரிய விருதும் இங்கு வழங்கி வைக்கப்பட்டன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச் முனசிங்க உள்ளிட்டவர்களின் சேவைகளை பாராட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஞாபகச் சின்னங்களையும் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் .ஏ.ஆர் எம். தெளபீக், கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.பி. அப்துல் வாஜித் உட்பட பிராந்திய வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பிரிவின் கீழ் சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய உத்தியோகத்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.