கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன பெண், பொதி செய்யப்பட்ட நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லண்டனில் இருந்து நாடு திரும்பிய பெண்ணொருவர், கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த பெண் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது இரத்தக்கறை காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
லண்டனில் மகனுடன் வசித்து வந்த 67 வயதுடைய இராசேந்திரம் இராசலட்சுமி என்பவர், 3 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
அதன்பின், கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த பெண் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று வங்கிக்கு சென்று திரும்பி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை பி.பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம் நேற்று மாலை 7.20 மணியளவிலேயே அவருடைய உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.
அவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரியைமாளரால் நேற்று மாலை 6.00 மணியவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்படுவதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.
குறித்த சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை அழைத்து சென்று பொலிசார் அடையாளம் காட்டியுள்ளனர்.
குறித்த சடலம் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தபுரம் பரப்பாலம் பகுதியில், பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது.
இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசியுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறு உயிழந்த பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.